மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Tuesday 17 May 2016

சிறுவர் மர்மக் கதைகள்: ஜெயவேலனின் படகு- பாகம் 2

காற்று ஒரு நிலையில் இல்லை. இறக்கை முளைத்த இராட்சத பறவையைப் போல அங்கும் இங்கும் சுழன்றடித்துக் கொண்டிருந்தது.

ஜெயவேலன் உடலின் அத்தனை பலத்தையும் சேர்த்துக் கடலில் நீந்தினான். இன்னும் சற்று தூரம் சென்றால் கரை வந்துவிடும் என நம்பினான். வாய்க்குள் கடல் நீர் நுழைந்து மூச்சுத் திணறலை உண்டாக்கியது.

கடல் இரக்கமற்றது என அவனுக்குத் தெரியும். கடலோர வாழ்க்கையில் அவன் நிறைய பிணங்கள் கரையில் ஒதுங்கியதைப் பார்த்திருக்கிறான். இருந்தாலும், கடல் காற்று அவன் உள்ளுக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஜிம்மி! ஜிம்மி!”


அவன் ஓயாத குரல் ஜிம்மியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் வெளிச்சத்துடன் ஒரு பெரிய கப்பல் அவனுக்குத் தென்பட்டது. அவனைக் காப்பாற்ற கடவுள் அனுப்பிய கப்பல் என உறுதியாக நம்பினான். மேலும் உற்சாகம் கிடைத்ததில் நீந்தத் துவங்கினான்.

திடீரென ஒரு குரைத்தல் ஒலி. அவன் திகைத்து சுற்றும் முற்றும் தேடினான். ஜெயவேலனின் பார்வை அலைக்கு ஈடாக அலைந்தது.

ஜிம்மி! நீயா?”

அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. பேரலைகளில் ஒலி பெரிய சத்தமாக இருந்தது. மீண்டும் அக்குரைத்தல் ஒலி அவனை நெருங்கியது. இருட்டில் அவனால் எதையும் கவனிக்க முடியவில்லை.

கடலலை அனைத்தையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் தெரியும் அந்தக் கப்பல் பார்வையைவிட்டு மெல்ல மறையத் துவங்கியது. குரைத்தல் ஒலி வேறு மூலையில் கேட்டுக் கொண்டிருந்தது.

ஜிம்மி! நீ வந்துட்டியா? வா ஜிம்மி!”

குரைத்தல் ஒலி மேலும் வேகமாகக் கேட்கத் துவங்கியது. ஆனால், இப்பொழுது வேறு திசையில் அது கேட்டுக் கொண்டிருந்தது. ஜெயவேலனுக்கு ஒன்றும் புரியவில்லை. அலைகள் மேலெழுந்து அவனது முகத்தில் அறைந்தன.

                விநோதமான ஒலியுடன் தூரத்தில் தெரிந்த அக்கப்பல் காற்றையும் அலைகளையும் சமாளித்துக் கொண்டிருந்தது. அக்கப்பலிலிருந்து ஒரு கைவிளக்கொளி அவன் முகத்தில் பட்ட்த்தும் அங்கு யாரோ இருக்கிறார்கள் என ஜெயவேலன் உணர்ந்தான்.

  “வேலா! நீந்து! நீந்து! உன்னால முடியும்

அவனே அவனுக்கு நம்பிக்கையளித்துக் கொண்டான். கைகள் இரண்டும் கணமானாலும் நிற்காமல் நீந்தினான். இன்னும் சற்று தூரத்தில் அக்கப்பலை அடைந்துவிடும் ஆர்வம் துளிர்விட்டது.

சட்டென அவன் கால்களை உரசிக் கொண்டு உள்ளே ஏதோ அசைந்து நகர்ந்த்து. ஜெயவேலனுக்கு திடீர் நடுக்கம் கூடியது. என்னவாக இருக்கும் எனப் பார்க்கவும் தெம்பில்லை. தொடர்ந்து நீந்த வேண்டும் என மட்டுமே முயன்றான்.

மீண்டும் ஏதோ அவன் கால்களுக்கிடையில் நுழைந்து அசைந்தது. உடல் வளவளப்பான ஏதோ ஒன்று என அவனால் நன்றாக உணர முடிந்தது. அக்கப்பலுக்கு அருகில் வர வர வெளிச்சம் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.

இப்பொழுது அவனுக்குப் புத்தெழுச்சி கிடைத்தது. ஒரு பிரமாண்டமான கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தான். சட்டென கீழே இறங்கி வந்த நிலவைப் போல அக்கப்பல் பிரகாசத்துடன் காத்துக் கொண்டிருந்தது.

மீண்டும் தன் கால்களுக்கிடையே வளவளப்பான ஏதோ ஒன்று அசைந்து நகர்ந்த்தும் ஜெயவேலன் அதனைக் கவனித்தான். பாதி மனித உடலும் பாதி மீன் உடலும் கொண்ட கடற்கன்னி அலைகளையும் கடந்து தெரிந்தாள். ஜெயவேலனுக்கு அதிர்ச்சி மூளைக்குள் ரீங்காரமிட்டது.

ஐயோ! காப்பாத்துங்க!” எனக் கத்திக் கொண்டே கொஞ்சம் நகர்ந்து நீந்தினான்.

அவன் கைகள் கடலின் முகத்திரையை மேலும் வேகமாக ஓங்கி அடித்தன. கடற்கன்னி பிரகாசமான வெளிச்சத்துடன் அவனுக்கு முன்னே வந்து நின்றது. அவள் கையில் அவனுடைய நாய்க்குட்டி ஜிம்மி நனைந்த உடலுடன் இருந்தது.

 தொடரும்

-          ஆக்கம்: கே.பாலமுருகன்


No comments:

Post a Comment