மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Friday 21 August 2015

உரை - pecutan akhir - day 10

உன் வகுப்பாசிரியர் பள்ளி மாற்றலாகி செல்லவிருக்கிறார். அவருடைய பிரியாவிடை நிகழ்ச்சியில் நீ ஆற்றிய உரையை எழுதுக.


பிரிய மனமில்லாமல்
பிரிந்து செல்லும் ஒரு பறைவைக்கு
சுமையான கையசைத்தல்

      பெரும் மதிப்பிற்குரிய சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே, பள்ளியின் துணைத்தலைமை ஆசிரியர்களே, நம்மை விட்டு வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லவிருக்கும் ஆசிரியர் திரு.ரகு அவர்களே, ஆசிரியர்களே, கம்பன் வகுப்பு மாணவர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாள் கம்பன் வகுப்பு மாணவர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும். கடந்த ஆறு ஆண்டுகளாக எங்களை வழிநடத்தி, ஒரு முழுமைப்பெற்ற மாந்தனாக உருவாக்குவதில் கடுமையான உழைப்பை வழங்கிய எங்களின் உயிரினும் மேலான அன்பிற்கினிய ஆசிரியர் திரு.ரகு அவர்களின் பிரியாவிடை நிகழ்ச்சியில் இருக்கின்றோம். உயிர் பிரிந்தாலும் உன்னைப் பிரியாத வரம் ஒன்று கிடைக்குமோ?’


அருமை நண்பர்களே,

நாம் இந்த வகுப்பறையில் நிரம்பியிருக்கும் ஒவ்வொரு நினைவுகளிலும் ஆசிரியர் ரகுவின் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அவர் ஒரு நாளும் சோர்வாக அமர்ந்து நாம் பார்த்ததில்லை. பம்பரம் போல எல்லா வேலைகளையும் ஏற்றுக்கொண்டு சுழன்றப்படியே இருப்பார். இத்தனை சுறுசுறுப்பான ஒரு மனிதரை நம் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டோம்.

பாசத்தையும் அன்பையும் உயிராய் நேசிக்கும் அன்பின் உறவுகளே,


கடந்த 12 ஆண்டுகளாகச் சுங்கை ரெங்காம் பள்ளியில் தமிழ்மொழி ஆசிரியராகப் பணியாற்றிய திரு.ரகு அவர்கள் நாளை கெடா மாநிலத்திலுள்ள மகாஜோதி தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி செல்லவிருக்கிறார் என்பதை வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் திரு.ரகு கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிலாங்கூர் மாநிலத்தில் அவர் ஆற்றிய 12 ஆண்டுகளின் சேவையை நாம் எப்பொழுதும் மறக்க இயலாது. அவர் மீண்டும் தன் பிறந்த மண்ணுக்குச் செல்கிறார் என்பதும் நமக்கு மகிழ்ச்சியான செய்தியே.

ஆசிரியர் பெருந்தகைகளே,

திரு.ரகு அவர்கள் இப்பள்ளியின் ஆசிரியர்களுடன் நல்லுறவு கொண்டவர் என்பதை அனைவரும் அறிவோம். உதவி என்றால் ஓடோடி வந்து முதல் ஆளாக நின்று கைக்கொடுக்கும் நட்புணர்வு கொண்ட மனிதர். அவர் நாளை முதல் இப்பள்ளியில் பணியாற்ற மாட்டார் என்பது இப்பள்ளியில் பணிப்புரியும் இதோ என் முன்னே அமர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் வருத்தத்தை உண்டாக்கும் என நம்புகிறேன். நாம் அவருக்குக் காட்டும் கையசைத்தல் இறுதியானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

கூடி நின்று வாழ்த்த வந்திருக்கும் பெருமைக்குரிய நல்லுள்ளங்களே,

ஆசிரியர் திரு.ரகுவின் மொழிப்புலமை அவர் செல்லுமிடமெல்லாம் செழித்தோங்க வேண்டும். அவருடைய படைப்பாற்றல்திறனை அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பதற்கொப்ப அவர் செல்லும் இடங்களிலெல்லாம் நல்ல சகோதரர்களும் நண்பர்களும் வாய்க்கும்படி இயற்கையிடம் மன்றாடுகிறேன்.

கண்ணீரில் நனைக்கிறோம் உங்கள் பிரிவை
இனி எப்பொழுதும் திரும்பி வராவிட்டாலும்
நீங்கள் விதைத்த விதைகள் உறங்காமல்
வளர்வோம்

ஆசிரியர் திரு.ரகுவின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் மாணவர்கள் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிக் கூறி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.


ஆக்கம்: ஆசிரியர் கே.பாலமுருகன்

No comments:

Post a Comment